அடர் பனி காரணமாக சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
By: Nagaraj Sun, 15 Jan 2023 3:12:09 PM
சண்டிகர்: கடும் குளிர், அடர் பனி காரணமாக சண்டிகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிகையைத் தொடர்ந்து. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்லும் போது கட்டாயம் முகத்தை மறைத்துச் செல்லவேண்டும். வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சில நகரங்களுக்கு பனி தொடர்பாக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
இமாச்சலபிரதேசத்தில் பனிப்பொழிவு காரணமாக, சிம்லா, மணாலி உள்பட 4 பகுதிகளுக்கு செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிக பனிப்பொழிவால், மலை முகடுகள், வீடுகள் உள்ளிட்டவற்றை வெண்பனி மூடியது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலும், அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டதால், வெண்பட்டு போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின், ரம்பன் பகுதியில் பனிப்பொழிவு அதிகரித்த நிலையில், சாலைகளை மூடியிருந்த பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.