கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
By: vaithegi Thu, 27 July 2023 11:21:48 AM
இந்தியா: வட மாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் இமாச்சல பிரதேசத்தில் பெய்யும் பருவமழை பொழிவால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவுள்ளது.
இதையடுத்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலைகள் பல முற்றிலும் அழிந்து விட்டன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகம் ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளன.
மழை மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதம் பற்றி அந்த மாநில வருவாய் துறை அமைச்சர் ஜெகத் சிங் நேகி அறிவிப்பு வெளியிட்டார். அதில், ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 188 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 194 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அத்துடன் 652 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளதாகவும், 6500 வீடுகளில் பகுதியாக சேதம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் மேலும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.