ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து தமிழக அரசு உத்தரவு
By: Nagaraj Fri, 09 Oct 2020 4:04:02 PM
தமிழக அரசு உத்தரவு... கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் ரேசன் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளுக்கு வரும் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை அங்கீகாரம் மூலம், பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது முதல்நிலை நடைமுறை ஆகும்.
இந்நிலையில், அனைத்து கூட்டுறவு மற்றும் மண்டல இணைப் பதிவாளர்களுக்கும்
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்
கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக, யாருக்கும்
ரேசன் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது என குறிப்பிடப்பட்டு
உள்ளது.
மேலும், அரசு ஏற்கனவே வெளியிட்ட வழிமுறைகளின்படி, ஆதார்
ஓடிபி முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்வது, ரேஷன் அட்டைதாரரின் பதிவு செய்த
செல்போனுக்கு ஒடிபி அனுப்புவது, மின்னணு ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்வது
போன்ற மாற்று வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி, பயனாளர்களுக்கு
பொருட்கள் வழங்க வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.