கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க உத்தரவு
By: Nagaraj Thu, 19 Jan 2023 12:39:40 PM
கேரளா: கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிகள் அனைவருக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவிகளுக்கும் மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.
மாதவிடாய் காலத்தில் மாணவிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே அவர்கள் ஓய்வாக இருக்க மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டதாக முகநூல் மூலம் அமைச்சர் பிந்து தெரிவித்துள்ளார்.
மாதவிலக்கு நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்த கொச்சி பல்கலைக்கழகத்தை அவர் பாராட்டினார். இதுபோன்று விடுமுறை அளிப்பது இதுவே முதன் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவிகள் பிரிவினர் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதையடுத்து கொச்சி பல்கலைக்கழகம் அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளித்துள்ளது. மேலும் மாணவிகள் பருவநிலைத் தேர்வுகள் எழுத வேண்டுமெனில் அவர்கள் 75 சதவீத வருகைப் பதிவேடு இருக்க வேண்டும். இப்போது மாதவிலக்கு நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இது 73 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கொச்சி பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 8,000 மாணவர்கள் பல்வேறு துறைகளில் படித்து வருகின்றனர். இவர்களில் பாதி பேர் பெண்களாவர்.
இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி படிப்பு உள்ளிட்ட அனைத்து படிப்புகளில் படிக்கும் மாணவிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.