அரசு மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக படுக்கைகள் அமைக்க உத்தரவு
By: Monisha Wed, 26 Aug 2020 12:48:41 PM
புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் அவர் அங்குள்ள கல்லூரியின் மாணவர் விடுதியையும் பார்வையிட்டார். அங்கும் 300 படுக்கைகள் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
தற்போது மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் விடுமுறையில் இருப்பதால் அவர்கள் தங்கியிருக்கும் அறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிற பள்ளி, கல்லூரிகளில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க போதிய கழிப்பறை வசதியில்லை. ஆனால் இங்கு போதுமான வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர், மக்களை காத்திருக்க வைக்காமல் உடனடியாக பரிசோதனை நடத்தி சோதனை முடிவுகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.