கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த உத்தரவு
By: vaithegi Tue, 07 Feb 2023 7:06:52 PM
சென்னை: கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விரைந்து பாடத்தை நடத்தி முடிக்க அறிவுறுத்தல் .... தமிழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை சற்று தாமதமானது. எனவே இதன் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் வகுப்புகள் தொடங்க வெகு நாட்கள் ஆகிவிட்டதால் பாடங்களை உரிய நேரத்தில் நடத்தி முடிப்பதில் பேராசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதன் இடையில் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் திடீரென விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டது.இதனால் வகுப்புகள் தடைப்பட்டு பாடங்களை நடத்த முடியாத சூழல் நிலவியது.
இதையடுத்து தற்போது 2022 – 2023 கல்வியாண்டு முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் விரைந்து தேர்வுக்குரிய பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டிய சூழலுக்கு பேராசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இதனை கருத்தில் கொண்டு அண்மையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் நேர வகுப்புகள் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கட்டாயம் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வரும் 01.05.2023 அன்றுக்குள் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.