கடந்த இரண்டு வாரங்களாக உலகளவில் தினமும் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Tue, 16 June 2020 1:42:48 PM
சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் பல நாடுகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 81 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 34 லட்சத்து 81 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இதுவரை 41 லட்சத்து 87 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா காரணமாக, இதுவரை 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் பேட்டி அளித்தபோது, தொடக்கத்தில் வைரஸ் 1 லட்சம் பேருக்கு பரவ இரண்டு மாதங்களுக்கு மேலானது. ஆனால் தற்போது கடந்த இரண்டு வாரங்களாக தினமும் 1 லட்சம் பேருக்கு வைரஸ் பரவுகிறது. குறிப்பாக தெற்கு ஆசியா மற்றும் அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் உலக நாடுகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.