- வீடு›
- செய்திகள்›
- உளவு பார்க்க வந்த இந்தியாவின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தகவல்
உளவு பார்க்க வந்த இந்தியாவின் ஆளில்லாத விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தகவல்
By: Nagaraj Thu, 28 May 2020 11:35:29 AM
இந்தியாவின் ஆளில்லாத உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து இந்தியா தரப்பில் எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.
இந்திய - சீன எல்லையில், சீனா படைகளை குவித்து வருவதால் இருநாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவும் எல்லையில் படைகளை குவிக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாக்., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர், பாபர் இப்திகர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான, ராக்சிக்ரி பகுதியில், இந்திய ராணுவத்துக்கு சொந்தமான, சிறிய ரக, ஆளில்லா உளவு விமானம், பாக்., பகுதிக்குள் 650 மீட்டர் துாரத்துக்கு ஊடுருவியது. அதை, பாக்., படையினர் சுட்டு வீழ்த்தியது, என கூறியுள்ளார்.
இந்நிலையில் ராணுவம் சார்பில் கூறப்பட்டதாவது: அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கிடையில் நிறுவப்பட்ட விதிமுறைகளையும், தற்போதுள்ள விமான ஒப்பந்தங்களையும் மீறி, இந்திய ராணுவம் இத்தகைய தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.
2003ம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இந்திய ராணுவம் செயல்பட்டுள்ளது. இவ்வாறு கூறியது.
இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான் பதிவிட்ட டுவிட்டில், 'பா.ஜ., கட்சியை சேர்ந்த இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில், இந்தியா மேற்கொள்ளும் விரிவாக்க கொள்கை, பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது' என பதிவிட்டுள்ளார்.