அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே பதிவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல்
By: Nagaraj Sat, 13 June 2020 09:03:46 AM
வங்கி கணக்கு குறித்த தகவல்... கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில், பாக்.,கில், ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய தகவல்களை, சார்க் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவே பதிவிட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய திட்ட வழிமுறைகளை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், சில நாட்களுக்கு முன் பதிவிட்டு இருந்தார்.
இதனை நிராகரித்த மத்திய அரசு, 'பாக்., தன் நாட்டு மக்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதை விட, நாட்டிற்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளில் பணம் வழங்குவதில் பிரபலமானது' என, பதிலடி கொடுத்தது.
'இம்ரான் கானுக்கு, புதிய ஆலோசகர்கள் தேவை. அவர்கள், கடன் பிரச்னை மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு, எவ்வளவு பாடுபட்டார்கள் என, நாம் அறிவோம். அதை நினைவில் கொள்வது, அவர்களுக்கு நல்லது' என, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியிருந்தார்.
இந்நிலையில், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே, பாக்., பிரதமர் விரும்பியதாக, அந்நாடு தெரிவித்துள்ளது.'வைரஸ் தாக்குதல் உள்ள நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை, சார்க் உறுப்பு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே, ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் தொடர்பாக, பாக்., பிரதமர் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்' என, அந்நாட்டு வெளியுறவுத்துறை அலுவலகம் கூறியுள்ளது.