பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு 110 நாட்களுக்கு பிறகு ஜாமீன்
By: Karunakaran Fri, 12 June 2020 12:23:26 PM
கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சிச் தலைவரும் ஐதராபாத் தொகுதி எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பங்கேற்றார். அப்போது ஓவைசி பேசுவதற்காக மேடைக்கு வந்தபோது, திடீரென அமுல்யா லியோனா என்ற இளம்பெண் மேடையில் ஏறினார்.
திடீரென அவர் மைக்கை பிடித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டார். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளரான அந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தும், அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்க மறுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
தற்போது பெங்களூரு அமர்வு நீதிமன்றத்தில் அமுல்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அவருக்கு அவரை சிறையில் இருந்து விடுவித்தால், தலைமறைவாகிவிடுவார் என்று கூறி ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அதன்பின், நேற்று இரவு மற்றொரு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்த ஜாமீன் மனு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் பெங்களூரு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அதன் அடிப்படையில், நேற்று இரவு அமுல்யாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 110 நாட்களுக்கு பின் இன்று அவர் ஜாமீனில் வெளியே வரவுள்ளார்.