கொரோனா அச்சத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் வருகை குறைவு
By: Nagaraj Tue, 08 Sept 2020 1:34:27 PM
சென்னையில் கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில்சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, நாடு முழுவதும் நேற்று முதல் தொடங்கியது.
சென்னையிலும் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.
நாளை முதல் (செப்.9) சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.
மெட்ரோ
ரயில் நிலையங்களில், கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. ஊழியர்கள் கையுறை, முகக்கவசங்கள் அணிந்து கொண்டு
பணியாற்றினர்.
மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த தமிழக தொழில்துறை
அமைச்சர் எம்.சி.சம்பத், விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரயில்
நிலையம் வரை பயணிகளுடன் பயணம் செய்தார். அவருடன் மெட்ரோ ரயில் நிறுவன
நிர்வாக இயக்குநர் பிரதீப் யாதவ் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர்
அதிகாரிகள் பயணம் செய்தனர்.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் மெட்ரோ ரயில்
50 விநாடிகள் நின்று செல்லும், பயணிகள் உரிய இடைவெளியை கடைபிடித்து
பொறுமையாக மெட்ரோ ரயில்களில் ஏறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு
முன்பு மெட்ரோ ரயில்களில் தினமும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பயணம் செய்தனர். தற்போது, கொரோனா அச்சத்தால் மெட்ரோ ரயில்களில்
பயணிகளின் வருகை குறைவாக இருக்கிறது. இருப்பினும், வரும் நாட்களில்
பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று
அதிகாரிகள் தெரிவித்தனர்.