சுவிஸில் 9000 அடி உயரத்தில் சிக்கிய பயணிகள்: ஹெலிகாப்டரில் மீட்பு
By: Nagaraj Fri, 21 July 2023 07:50:33 AM
சுவிஸ்: 300 பயணிகள் பத்திரமாக மீட்பு... சுவிஸில் ஆல்ப்ஸ் மலையில் உச்சிக்கு சென்ற கேபிள் கார் திடீரென பழுதடைந்ததால் அதில் சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சுவிஸில் உள்ள லெஸ் டயபிள்ரெட்ஸ் மலைப் பகுதியில் உள்ள பிரபலமான பனிப்பாறையில் கிளேசியர் 3000 ஸ்கை ரிசார்ட் வரையிலான கேபிள் காரில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கேபிள் காரில் ஒரு சிறப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற முடியும் என்றும் கேபிள் கார் நிலையத் தலைவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில், 2,971 மீட்டர் (9,747 அடி) உயரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்கலைச் சரிசெய்யும் நேரத்தில் கண்கவர் காட்சிகளைக் காத்திருந்து மகிழும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும், மக்கள் காத்திருக்கும் போது மலை உச்சி உணவகத்தில் பானங்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், 300 பேர் மீட்கப்பட்டனர்.