இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே சுமூகமான உறவை மேம்படுத்த அமைதி ஒப்பந்தம்
By: Karunakaran Fri, 14 Aug 2020 10:29:30 AM
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டபோது, மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. ஆனால், இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது.
இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்ததால், அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. அதன்பின், 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது.
தற்போது பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான ராஜாங்க ரீதியிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்-அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது அல் நஹ்யான் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வு மத்திய கிழக்கில் அமைதியை முன்னேற்றும் என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் இருநாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாக உள்ளது. அதில், பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புதல் அளிக்கப்படுகிறது.