விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்
By: Nagaraj Tue, 14 Mar 2023 11:12:05 PM
சிக்கமங்களூர்: சிக்கமங்களூரில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
சிக்கமங்களூர் மாவட்டம் தரிகெரே தாலுகா மஸ்கல்மரடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பீதியடைந்துள்ள கிராம மக்கள், விளைநிலங்களுக்கு செல்லவே பயத்தில் உள்ளனர்.
மேலும் காட்டு யானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினரும் காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் வெளியேறின.
அந்த யானைகள் கிராமத்தையொட்டி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து காபி செடிகளை பிடுங்கி எறிந்தும், குழாய்களை மிதித்து உடைத்தும் சேதப்படுத்தின. மேலும் மரங்களை பிடுங்கி எறிந்தும் அட்டகாசம் செய்தன.
பின்னர் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இந்த நிலையில் நேற்று காலை விவசாயிகள் காப்பி தோட்டத்துக்கு சென்றனர். அப்போது காட்டு யானைகளின் அட்டகாசத்தால் நாசமாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினரை சூழ்ந்துகொண்டு, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும். யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதனை ஏற்ற வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.