கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
By: Nagaraj Wed, 10 June 2020 3:19:19 PM
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளார்.
கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழும் பட்சத்தில், அவர்கள் கனடா வர தனது அரசு அனுமதியளிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் குடும்ப உறுப்பினர்களுக்காக நெகிழ்த்தப்படுகின்றன. இருப்பினும் நாட்டுக்குள் நுழைவோர் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலக்கு கனேடியர்களின் கணவன் அல்லது மனைவி, இணைந்து வாழ்வோர், குழந்தைகள், பெற்றோர் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர்களுக்கு பொருந்தும். ஆனால், நாட்டுக்குள் வருபவர்கள் குறைந்தது 15 நாட்களாவது தங்க வேண்டும் என்று புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்கோ மெண்டிசினோ தெரிவித்துள்ளார். கனடாவில் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால் அமெரிக்க எல்லையும் மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.