சென்னையில் இன்று மாலை பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
By: Nagaraj Tue, 29 Sept 2020 8:49:34 PM
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதேபோல் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள்,சேலம்,
தர்மபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம்,
கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்
மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒரு மணிநேரத்திற்குமேல் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது.