எரிபொருள் விலை உயர்வால் பாகிஸ்தான் மக்கள் அவதி
By: Nagaraj Sun, 03 July 2022 4:27:47 PM
இஸ்லாமாபாத்: உச்சமடையும் விலை... பாகிஸ்தானில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் குடிமக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர், பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின் கட்டணமும் உயர்ந்து உள்ளது. இதனால், அந்நாட்டு பொதுமக்கள் அதிக அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் ஷெபாஸ் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.14.84 விலை உயர்ந்தது. இது ஒரு மாதத்தில் 4வது முறையாகும்.
இதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.248.74 ஆக உள்ளது. இதனை பாகிஸ்தானிய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இதேபோன்று, அதிவிரைவு டீசல் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.13.23 உயர்ந்து அந்நாட்டு பண மதிப்பின்படி, ரூ.276.54 ஆக உள்ளது. மண்ணெண்ணெய் ரூ.18.83 விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து கொள்ள கூடிய சூழல் உருவாகி உள்ளது. இதனால், ஒரு மாதத்தில் ஒட்டு மொத்த பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு 11 சதவீதம் குறைந்து உள்ளது.
2021-2022ம் நிதியாண்டுக்கான எண்ணெய் விற்பனை 22.5 மில்லியன் டன்களாக உள்ளது. எரிவாயு வினியோக பற்றாக்குறையால் துணி தொழிற்சாலைகளும் வருகிற 8ந்தேதி வரை தொடர்ந்து மூடி இருப்பதற்கு முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே 30 சதவீத துணி உற்பத்தி குறைந்து உள்ளது. எரிவாயு பற்றாக்குறையால் 50 சதவீதம் வரை உற்பத்தி குறையும் பாதிப்பு உள்ளது. இதனால், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட கூடிய சூழல் காணப்படுகிறது.