புயல் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி ட்விட்
By: Monisha Tue, 02 June 2020 5:17:23 PM
அரபிக்கடலில் நிசர்கா என்ற புயல் உருவாகி வரும் நிலையில் மேற்கு மாநிலங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது வலுவடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நிசர்கா புயல் சின்னம் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 710 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இதுமேலும் வலுவடைந்து குஜராத் மாநிலம் நவுசாரி அருகே ஜூன் 4-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகி வரும் புயலால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க பிராதிப்போம். அந்த பகுதி மக்கள் போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.