ஊரடங்கு தளர்வால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-சிவசேனா
By: Karunakaran Wed, 10 June 2020 11:06:53 AM
இந்தியாவிலே கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் மூலம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் கண்மூடித்தனமாக வைரஸ் பற்றிய பயமின்றி நடந்து கொள்கிறார்கள் எனவும், இதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் பிரச்சினை இல்லை என்பதை உறுதிபடுத்த மக்கள் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஊரடங்கை உடனடியாக திரும்ப பெற விரும்பவில்லை. ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி வருகிறார்கள் என சாம்னாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.