மஹாளய அமாவாசையை ஒட்டி சுருளி அருவியில் மக்கள் நீராடல்
By: Nagaraj Sun, 25 Sept 2022 3:18:49 PM
கம்பம்: சுருளி அருவியில் நீராடல்... தேனி மாவட்டம் சுருளி அருவியில் மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி முன்னோர் வழிபாடு செய்தனர்.
ஆண்டு தோறும் வரும் அமாவாசை புரட்டாசி மாதத்தில் வரும்போது மஹாளய அமாவாசை மிகவும் புனிதமாகவும், அன்று முன்னோர் வழிபாடுகள் செய்வது சிறப்பாகும். மஹாளய அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஆண், பெண் பக்தர்கள் சுருளி அருவி வளாகத்தில் குவிந்தனர்.
கடந்த 50 நாட்களாக தூவானம் அணையிலிருந்து அதிகப்படியான தண்ணீரை திறந்து விட்டதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மஹாளய அமாவாசை என்பதால் அணையிலிருந்து தண்ணீர் அளவாக திறக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குளிக்க, ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதியளித்தனர்.
அதன்பேரில் பக்தர்கள் அதிகாலையிலிருந்தே நீராடினர். அடிவாரத்தில் உள்ள
வளாகத்தில் சுருளியாற்றங்கரையில் இறந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம்
செய்தனர். அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
பக்தர்கள்
கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டது. கம்பம் அரசு
போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள்
வந்த வாகனங்கள் தனியாக நிறுத்தப்பட்டது. ராயப்பன்பட்டி போலீசார்
பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.