குடும்பம் குடும்பமாக வந்து அதிபர் மாளிகையில் பொழுதை கழிக்கும் பொதுமக்கள்..
By: Monisha Mon, 11 July 2022 8:00:21 PM
இலங்கை: இலங்கையில் அதிபர் மாளிகையில் நுழைந்த பொதுமக்கள், அதனை மக்கள் மாளிகையாக மாற்றியுள்ளனர்.பல அடுக்கு பாதுகாப்பு, அதிபருக்கான தனி பாதுகாப்பு படை என இலங்கையின் அதிகாரம் மிக்க அதிபர் மாளிகை தற்போது அருங்காட்சியகத்தைப் போல மாறி இருக்கிறது.
அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து போராட்டக்காரர்கள் ஓட்டும் காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.
அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிபர் கோத்தபயவின் அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலொன்றில், அவசர அவசரமாக கோத்தபய ராஜபட்சவின் உடமைகள் ஏற்றப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.
எல்லோரும் இலங்கையின் மன்னர்கள் என உணர்த்திய இந்த தருணங்கள் தற்போது இணையத்திலும், இலங்கை மக்களின் இதயத்திலும் உலாவந்து கொண்டிருக்கின்றன.