கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகம் அனுமதி
By: Karunakaran Tue, 15 Sept 2020 2:51:27 PM
கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் இறுதிகட்ட பணியில் உள்ளதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, சீனா நாட்டின் தடுப்பூசிகள் போன்ற பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. மேலும், கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கிவிட்டதாக கூறும் ரஷிய உலகின் முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை பதிவும் செய்துள்ளது.
இந்நிலையில் சீனா தனது நாட்டு மக்களுக்கு இறுதிகட்ட பரிசோதனை நிலையில் உள்ள உறுதிப்படுத்தப்படாத கொரோனா தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் செலுத்தி வருகிறது. அங்கீகரிக்கப்படாத இந்த தடுப்பூசி பக்கவிழைவுகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தும், அவசரகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசியை சீனா தனது மக்களுக்கு செலுத்தி வருகிறது.
இந்நிலையில் சீனோபார்ம் என்ற சீன மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 கட்ட மனிதபரிசோதனைகளை முடித்துள்ளது. அதில் இந்த கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தெரியவந்தது. இறுதிகட்டமான 3-ம் கட்ட தடுப்பூசி பரிசோதனை தற்போது நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் பரிசோதனை நிலையில் உள்ள சீனோபார்ம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசாரகால பயன்பாட்டிற்காக கொண்டுவர அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு நிரூபிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டை சேர்ந்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில் செலுத்த அமீரகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.