திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை, திருமணம் செய்ய அனுமதி
By: Karunakaran Mon, 08 June 2020 09:52:00 AM
கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
இன்றும், நாளையும் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்பின், 10-ந்தேதி அங்குள்ள உள்ளூர் மக்கள்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.
11-ந்தேதி முதல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் எனும் வீதம் படி, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தலாம். மேலும் திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.