ஊரகப் பகுதிகளில் மட்டும் முடி திருத்தும் கடைகள் திறக்க அனுமதி; முதல்வர் உத்தரவு
By: Nagaraj Mon, 18 May 2020 4:31:23 PM
தமிழகத்தில் நாளை முதல் ஊரகப் பகுதிகளில் முடித்திருத்தும் கடைகளை திறக்கலாம் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் சலூன் கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்து வருகிறது. நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இதில் தற்போது முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களை நாளை முதல் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த முடி திருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முடித்திருத்தும் தொழிலாளர்கள் கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும்.
முக கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதை உறுதி செய்ள வேண்டும். இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.