புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதி
By: Monisha Mon, 08 June 2020 12:07:16 PM
புதுச்சேரியில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் திறக்கப்படுகின்றன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், விடுதிகளில் தங்கவும் அனுமதி தரப்படுகிறது. மதவழிபாடு இடங்களுக்கு செல்லும்போது முக்கியமாக பக்தர்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். கை, கால்களை சோப்பு போட்டு நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே தரிசனத்துக்கு வர வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல், உடல் நலக் குறைவு உள்ளோர், 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பக்தர்களின் நலன் கருதி வழிபாட்டு தலங்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
துப்புதல், தும்முதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், சந்தனம், பூ, தீர்த்தம், பிரசாதம் ஆகியவை வழங்கப்பட மாட்டாது.
அதேபோல உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி தரப் படுகிறது. 50 சதவீத இருக்கைகள் வரை அனுமதிக்கலாம். தங்கும் விடுதிகளில் தங்குவோரின் பயண விவரம் உட்பட அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்றும் தெரிவிக்க வேண்டும்.
‘ஷாப்பிங் மால்கள்' இன்று திறக்கப்படுகின்றன. ஏசி அளவு தொடங்கி எவ்வளவு பேர் வரை அனுமதிக்கலாம் என்ற விரிவான உத்தரவு தரப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இதர செயல்படாத பிரிவுகளையும் இயக்கலாம்.