வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி
By: Nagaraj Thu, 01 Oct 2020 10:32:05 AM
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக சுமார் 4 மாதங்கள் மக்கள் முடங்கியிருந்தனர். பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். மாணவர்கள், பாடத்தில் சந்தேகம் இருப்பின் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம். அதே போன்று 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.
விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம் அக்டோபர் 15ம் தேதி முதல்
திறக்கலாம். சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர்
15ம் தேதி முதல் திறக்கலாம் என்று புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
இதேபோல், பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்களையும் அக்டோபர் 15
முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகள் மற்றும்
தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கவும், உணவங்கள்
மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் 10 மணிவரை பார்சல் விநியோகம்
செய்யவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானக்கடைகள்(பார்)
மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபானக்கூடங்களுக்கு கலால் விதிமுறைகள்படி
இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி
மாநிலத்தில் உள்ள கடற்கரைகள் சாலைகளில் இரவு 9 மணிவரை மட்டுமே நடைபயிற்சி
செய்ய அனுமதித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட
வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.