சென்னையில் இன்று முதல் முடி திருத்தும் நிலையங்களுக்கு அனுமதி
By: Nagaraj Mon, 01 June 2020 11:06:48 AM
இன்று முதல் இயங்க அனுமதி... சென்னையில் இன்று முதல் முடிதிருத்தும் நிலையங்களும், அழகு நிலையங்களும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ஜவுளிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் பல்வேறு தொழில்கள் இயங்க அரசு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மால்கள் தவிர்த்து, ஷோரூம்கள், பெரிய அளவிலான நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் போன்றவை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
ஒரு நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர்.
டீ கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.