தமிழகத்தில் புதிதாக 4 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி
By: Monisha Thu, 27 Aug 2020 12:17:04 PM
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் ஒரே நாளில் 73 ஆயிரத்து 631 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,652 ஆண்கள், 2,306 பெண்கள் என மொத்தம் 5,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 15 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 230 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 883 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1,290 பேரும், கோவையில் 484 பேரும், சேலத்தில் 451 பேரும், காஞ்சீபுரத்தில் 329 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 4 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல் முறையாக கோவை மற்றும் சேலத்தில் 450 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 42 லட்சத்து 73 ஆயிரத்து 123 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 946 ஆண்கள், 1 லட்சத்து 57 ஆயிரத்து 286 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேர் என 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 18 ஆயிரத்து 663 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 51 ஆயிரத்து 67 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 77 பேரும், தனியார் மருத்துவமனையில் 41 பேரும் என 118 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 6,839 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 606 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரையில் தமிழகத்தில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 60 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 52 ஆயிரத்து 362 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 4 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 82 தனியார் மற்றும் 63 அரசு பரிசோதனை மையங்கள் என 145 பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.