ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் மனு
By: Monisha Wed, 10 June 2020 11:15:33 AM
ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கால் பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்துகின்றன. ஆன்லைனில் மாணவர்கள் பங்கேற்கும்போது ஆபாச இணையதளங்களும் அவ்வப்போது குறுக்கிடுகின்றன. இதனால் அவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே ஆபாச இணையதளங்கள் குறுக்கீடு செய்யாத வகையிலும், அதுபோன்ற இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையிலும் சட்டரீதியாக விதிகளை வகுக்கவேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதளவசதியுடன் கூடிய கணினி உள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகளை கிராமப்புற மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முறையான உள்கட்டமைப்பு இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.