பெலகாவியில் தொழில் மீதான பக்தியால் கேமரா வடிவில் வீடு கட்டிய புகைப்பட கலைஞர்
By: Karunakaran Wed, 15 July 2020 12:11:32 PM
புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பல ரசனைகள் இருக்கும். வீடுகளை அழகான வடிவிலும், பார்ப்பவர்கள் ரசிக்கும் வகையிலும், கலைநயத்துடனும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் ஒரு புகைப்பட கலைஞர் தனது வீட்டை கேமரா வடிவில் கட்டியுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடக-மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள பெலகாவி மாவட்ட டவுனை சேர்ந்த ரவி ஒங்கலே என்ற புகைப்பட கலைஞர், சொந்தமாக ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 3 மகன்கள் உள்ளனர். இவர் சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவர்.
இந்நிலையில் பெலகாவி டவுன் பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்ட விரும்பிய ரவி ஒங்கலே, தனது வீட்டை கேமரா வடிவில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். தற்போது கேமரா வடிவில் வீடு கட்டி அசத்தி உள்ளார். இந்த வீட்டின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ரவி ஒங்கலே கூறுகையில், தொழில் மீதான பக்தி மற்றும் என்னை பெரிய ஆளாக்கிய கேமராவுக்கு பெருமை சேர்க்க நினைத்து போது எனது எண்ணத்தில் கேமரா வடிவில் வீடு கட்ட வேண்டும் என்று தோன்றியது. இந்த வீட்டை கட்டி முடிக்க எனக்கு ரூ.71 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஆனது. என்னை வாழ வைத்த கேமராவுக்கு கவுரவம் அளிக்க எனது மகன்கள் 3 பேருக்கும் கேமரா நிறுவனங்களின் பெயரான கேனான், நிகான், எப்சான் என பெயர் சூட்டி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.