பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்திலேயே உள்ளது - உலக சுகாதார அமைப்பு
By: Karunakaran Tue, 25 Aug 2020 09:23:56 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 2000க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறுநாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இருப்பினும் இன்னும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் தானமாக பெறப்பட்ட பிளாஸ்மாவை பயன்படுத்தி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில், பிளாஸ்மா சிகிச்சைக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், இந்த சிகிச்சை முறையை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கவில்லை.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா சுவாமிநாதன் கூறுகையில், பிளாஸ்மா சிகிச்சை இன்னும் பரிசோதனை கட்டத்தில்தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. அதன் ஆரம்பகட்ட முடிவுகள், இன்னும் அரைகுறையாகவே உள்ளன. கடந்த நூற்றாண்டில் கூட பல்வேறு தொற்றுநோய்களை குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் வெற்றி விகிதம் வெவ்வேறாக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் அவர், பிளாஸ்மா சிகிச்சை பயன்பாட்டை தொடர்ந்து மதிப்பிட வேண்டும். இதுதொடர்பான ஆய்வுகள் சிறிய அளவிலேயே நடக்கின்றன. குறைவான ஆதாரங்களே கிடைத்துள்ளன. அதை தரப்படுத்துவது கடினம். ஒவ்வொருவரிடமும் நோய் எதிர்ப்பு சக்தி வேறுபடும் என்பதால், குணமடைந்த ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பிளாஸ்மா சேகரிக்க வேண்டும். ஆபத்தை விட பலன்கள் அதிகமாக இருப்பதாக கருதினால், அவசர தேவைக்கு பிளாஸ்மா சிகிச்சையை நாடுகள் பயன்படுத்தலாம் என்று கூறினார்.