20வது அரசியலமைப்பு திருத்தத்தை ஒருமுறை வாசித்து பார்க்க வேண்டுகோள்
By: Nagaraj Thu, 22 Oct 2020 8:42:42 PM
ஒருமுறை வாசித்துப் பார்க்கவேண்டும்... 20வது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர் அந்த திருத்தத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கவேண்டும் என்று சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை தலைமையிலான மார்ச் 12 அமைப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் 20ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையிலேயே அந்த அமைப்பு இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளது. இது தொடர்பாக குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பின் இருபதாம் திருத்தம் அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பொதுமக்களுடன் தொடர்புடைய இறையாண்மையும், நாடும் சிதைந்துவிடும் என்று இந்த அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாக கருதக்கூடிய நாடாளுமன்றத்தின் சம
அதிகாரத்தன்மை சரிந்துவிடும். அதே நேரத்தில், நிதி மேற்பார்வைக்கான
நாடாளுமன்றத்தின் முழுமையான அதிகாரமும் இழக்கப்படும் என்று மார்ச் 12
இயக்கம் எச்சரித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத்
தேர்தலிலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட ஒரு முக்கிய விடயமாக புதிய
அரசியலமைப்பு அமைந்திருந்தது.
எனினும் இப்போது நிறுவ
முயற்சிக்கப்படுவது போன்ற இடைக்கால அரசியலமைப்பு அல்ல என்றும் மார்ச் 12
இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 20ஆவது திருத்தத்தில் அரசியலமைப்பு
பேரவையின் செயல்பாடுகள் குறித்த சர்ச்சைகள் முக்கியமானவையாகும். இதன்போது
அதன் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு தனிநபரைச் சுற்றி குவிந்துவிடக்கூடாது .
எனவே இந்த திருத்தத்துக்கு வாக்களிக்கும் முன்னர் அந்த திருத்தத்தை
மீண்டும் ஒருமுறை வாசித்தறியுமாறு மார்ச் 12 இயக்கம், அனைத்து நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் கோரியுள்ளது.
மார்ச் 12 இயக்கத்தில் பெப்ரல்,
தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் (சி.எம்.இ.வி), வாழ்க்கை உரிமை,
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, சர்வோதய இயக்கம் மற்றும்
சனச இயக்கம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.