கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
By: Monisha Wed, 17 June 2020 1:23:03 PM
கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் முதன் முதலாக மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்று கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. கடைசி தேர்வு மார்ச் 24-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற்றது.
ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வின் கடைசி நாளன்று நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை கணிசமான மாணவர்கள் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் எழுதாமல் விட்ட வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் படங்களுக்கான தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வை தவறவிட்ட மாணவர்கள் தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களிடம் ஒரு கடிதம் வழங்க வேண்டும்.
அவ்வாறு மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.