தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
By: Karunakaran Mon, 15 June 2020 10:09:18 AM
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி ஒலிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில்தான் என்ன பேசவேண்டும் என தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்க பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது என்னவென்றால், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்கு இன்னும் 2 வாரங்கள் இருந்தாலும், உங்கள் யோசனைகளும், கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. அவை பற்றிய எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாவை எதிர்த்து போரிடுவது பற்றியும், இதர விஷயங்கள் பற்றியும் நிறைய யோசனைகளை தெரிவிப்பீர்கள் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் ஆலோசனையை வரவேற்கும் விதமாக இந்த நிகழ்வு உள்ளது.
மக்கள் தாங்கள் விரும்புவதை தெரிவிக்க ‘மை கவ்’ இணையதளத்திலோ, 1800117800 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி மூலமோ, அல்லது இந்தி, ஆங்கிலத்தில் பேசி பதிவு செய்த செய்திகளையோ அனுப்பலாம் எனவும், அந்த குரல் பதிவுகள் கூட அந்த ஒலிபரப்பில் இடம்பெறும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.