இஸ்ரேல் பிரதமருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
By: Nagaraj Thu, 11 June 2020 3:34:56 PM
இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக தன் டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனாவுக்கு பின் இந்தியா - இஸ்ரேல் நல்லுறவு குறித்து எனது நண்பர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் கலந்துரையாடினேன். 5-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றிருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். வரும் நாட்களில் இரு நாடுகளின் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கம்போடியா பிரதமருடன் கலந்துரையாடியது குறித்து மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கம்போடியா பிரதமர் ஹன் சென்னுடன் பேசினேன். இந்தியாவும், கம்போடியாவும் கலாச்சாரம் மற்றும் வரலாற்று தொடர்புகளைக் கொண்டுள்ளன. அந்நாட்டுடன் உறவை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.