இன்றும், நாளையும் பிரதமர் மோடி முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை
By: Karunakaran Tue, 16 June 2020 11:01:16 AM
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இதுவரை 5 தடவை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 30-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும், இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை மந்திரி அமித்ஷா, சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இன்றும், நாளையும் பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். முதல் நாளான இன்று பிற்பகலில் பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்கண்ட், வடகிழக்கு மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடனும் மற்றும் சில யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களுடனும் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
2-வது நாளான நாளை மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கர்நாடகம், குஜராத், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் காஷ்மீர் துணை நிலை கவர்னர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொண்டு என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பது? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.