இந்திய-சீன எல்லை விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல - சித்தராமையா
By: Karunakaran Fri, 19 June 2020 2:36:54 PM
பெங்களூருவில் நேற்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் காணொலி மூலமாக எம்.எல்.ஏ.க்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். அப்போது இந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, இந்திய-சீன எல்லையில் நடக்கும் மோதல் குறித்த விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல என்று கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சீனா நடத்திய தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் இருக்கும். நமது ராணுவம் பெரிய அளவுக்கு பலம் வாய்ந்தவை. ஆனால் எல்லையில் நடைபெற்று வரும் மோதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது சரியல்ல என்று கூறினார்.
மேலும் அவர், மத்திய அரசு மக்கள் விரோத கொள்கைகளை அனுசரிக்கிறது. பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் சீரழிக்க புறப்பட்டுள்ளார். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டி.கே.சிவக்குமார் வருகிற 2-ந் தேதி மாநில தலைவராக பதவி ஏற்கும் விழா, மாநிலம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும். மேல்-சபை தேர்தலில் போட்டியிட நசீர்அகமது மற்றும் பி.கே.ஹரிபிரசாத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தேர்ந்தெடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று சித்தராமையா கூறினார்.