பிரதமர் மோடியின் லே பயணம் புதிய உத்வேகத்தை உருவாக்கும் - காங்கிரஸ் கட்சி
By: Karunakaran Sat, 04 July 2020 1:44:40 PM
லடாக் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின், எல்லை பகுதியில் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது.
இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதிக்கு நேற்று திடீர் என பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அதன்பின் அங்கு ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம், ஆக்கிரமிப்பு சகாப்தம் முடிந்துவிட்டது என்று கூறினார். அதன்பின் மோதலில் காயமடைந்த வீரர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
தற்போது அவரது பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், பதற்றம் நீடித்து வந்த பகுதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்பே சென்று இருக்க வேண்டும். இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதை மோடி அரசு மறுக்கக்கூடாது. இந்திய எல்லையில் ஊடுருவிய சீன துருப்புகள் அனைவரையும், அவர்களது ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் அடியோடு விரட்டி அடிக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், பிரதமர் மோடியின் லே பயணம் ராணுவ வீரர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை உருவாக்கும். அவர்களை ஒருங்கிணைக்க உதவும். சீனா நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா? என்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.