லடாக் சென்ற நிலையில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு
By: Karunakaran Sun, 05 July 2020 4:03:03 PM
லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இருநாட்டு உயரதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
லடாக் மோதலுக்கு பின், சீன பொருட்களை இறக்குமதி செய்வதை தடைசெய்யக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
அதன்பின், பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சந்திப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பிரதமர் மோடி, இந்தியா - சீனா வீரர்கள் மோதியதில் காயம் அடைந்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தற்போது இன்று திடீரென ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்-ஐ ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் லடாக் விவகாரம் குறித்து விளக்கம் அளித்ததாகவும், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.