ரஷ்ய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடல்!
By: Monisha Thu, 02 July 2020 5:27:21 PM
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரஷ்ய அதிபருடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது ரஷ்யா இரண்டாம் உலகப் போரில் வெற்றிப் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தையொட்டி பிரதமர் மோடி, ரஷ்ய நாட்டு அதிபர் விளாமிர் புதினுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதோடு கூட ரஷ்யாவில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு வாக்களிப்பது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதற்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்திய மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையேயான நட்புறவின் குறியீடாக, 2020 ஜூன் 24 அன்று மாஸ்கோவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் இந்தியப் படையினர் பங்கேற்றதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் விளைவுகளை சரிசெய்ய இரு நாடுகளும் எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைகளை இரண்டு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு உலகம், எதிர்கொள்ளப் போகும் சவால்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தை இருவரும் ஒப்பு க் கொண்டனர்.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கான, இருதரப்பு தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்வதற்கும் இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தொலைபேசி அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார்.