தமிழ்நாட்டின் பல்லாங்குழி விளையாட்டு பற்றி பெருமையுடன் குறிப்பிட்ட பிரதமர் மோடி
By: Karunakaran Mon, 29 June 2020 12:21:48 PM
ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்று கிழமையும் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக மக்களிடம் உரையாடி வருகிறார். அதன்படி, நேற்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, தமிழ்நாட்டில் விளையாடப்படும் பல்லாங்குழி விளையாட்டு பற்றி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
பல்லாங்குழி குறித்து பேசிய பிரதமர் மோடி, தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஓய்வாக இருக்கும் மக்களில் பலரும் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். தமிழ்நாட்டின் பல்லாங்குழி விளையாட்டு கர்நாடகத்தில் ‘அலிகுலி மனே‘ பெயரிலும், ஆந்திராவில் ‘வாமன் குண்ட்லு‘ என்ற பெயரிலும் விளையாடப்படுவதாக கூறினார்.
தட்டில் வரிசையாக உள்ள குழிகளில் முத்துக்களை நிரப்பி விளையாடும் பல்லாங்குழி விளையாட்டு தென்னிந்தியாவில் மட்டுமின்றி தெற்கு ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும் பிரபளமாகி வருவதாகவும், கிராமங்களில் தாயம் விளையாட்டும் விளையாடுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர், பரமபதம் எனப்படும் ஏணி-பாம்பு விளையாட்டு, சிறு கற்களை தூக்கிப்போட்டு பிடித்து விளையாடும் ‘களசிக்கல்‘ விளையாட்டு போன்ற விளையாட்டுகளையும் தற்போது சிறுவர், சிறுமிகள் விளையாடுகின்றனர். இதுபோன்ற விளையாட்டுகள்தான் நம் தேசத்தின் மக்களை இன்றைக்கும் உயிர்ப்போடு வைத்துள்ளதாக அவர் கூறினார்.