சமுதாயத்தில் பிரதமர் மோடி மத விஷ விதைகளை விதைக்கிறார் - சித்தராமையா கடும் தாக்கு
By: Karunakaran Fri, 03 July 2020 12:02:00 PM
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பா.ஜனதா கட்சியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்குகிறது. அந்த அமைப்பின் திட்டங்களை தான் பிரதமர் மோடி செயல்படுத்துகிறார் என்று கூறினார்.
கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி தோல்வி அடைந்துவிட்டார் எனவும், ஊரடங்கை அமல்படுத்தியபோது, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அமல்படுத்த வேண்டிய ஊரடங்கை முன்பு எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மோடி செயல்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுப்பதிலேயே காலத்தை கழிக்கிறார். இவ்வளவு பொய் பேசும் பிரதமரை நான் பார்த்ததே இல்லை. நாட்டில் கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என்று தொடக்கத்தில் குற்றம்சாட்டினர். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த தப்லிக் ஜமாத்தினர் இருக்கிறார்களா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் அமைப்புக்கு எதிராக சமுதாயத்தில் மத விஷ விதைகளை விதைக்கும் மோடி, பிரதமராக இருக்க தகுதியற்றவர் என்றும், முதல்-மந்திரி எடியூரப்பா பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளார் என்றும், அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.