சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் இருந்து பிரதமர் மோடி விலகல்
By: Karunakaran Thu, 02 July 2020 09:25:12 AM
லடாக்கின் கல்வான் பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இந்தியா -சீனா வீரர்களுக்கு இடையே மோதல் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் சீன பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பின், 59 சீன 'ஆப்'களை இந்திய அரசு தடை செய்துள்ளது. கடந்த காலங்களில் சீனாவிற்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, வி.ஐ.பி.,க்கள் பயன்படுத்தும் வெப் தலமான ‘வெய்போ’வில் தனது கணக்கை துவங்கியிருந்தார். தற்போது, பிரதமர் மோடியும் சீனா வெப் தலமான வெய்போவில் இருந்து விலகியுள்ளார்.
பிரதமர் மோடியின் வெய்போ கணக்கில் இருந்த ஃப்ரோபைல் போட்டோ, போஸ்ட்டுகள், கமெண்ட்கள் என 115 பதிவுகள் நீக்கப்பட்டன. மேலும் அக்கவுண்ட்-ஐ நீக்க முடிவு செய்தபோது, அதில் சிக்கல் இருப்பதால் உடனடியாக நீக்க முடியவில்லை. வெய்போ பயனாளிகள் அக்கவுண்ட்-ஐ நீக்க அனுமதி கொடுப்பதில்லை.
சீன அதிபருடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இரண்டு மட்டும் இருப்பதால் அவை அகற்றவில்லை. சீன அதிபர் படத்தை அனுமதியில்லாமல் வெய்போ நீக்குவதில்லை என்பதால், அக்கவுண்ட்-ஐ நீக்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வெய்போவில் 2015-ல் பிரதமர் மோடி இணைந்தார். பெரும்பாலும் ஜூன் 15-ந்தேதி ஜின்பிங்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற மட்டுமே இந்த தளத்தை பயன்படுத்துவார். ஆனால் பிரதமர் மோடி இந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறவில்லை.