பிரதமர் மோடியின் லடாக் பயணம் ராணுவ வீரர்களின் மன உறுதியை உயர்த்தும் - அமித்ஷா
By: Karunakaran Sat, 04 July 2020 09:23:07 AM
லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ந்தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இதனால் எல்லை பகுதியில் போர் மூளும் பதற்றம் நிலவி வருகிறது. அமைதியை ஏற்படுத்த இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி லடாக் எல்லைக்கு நேற்று திடீர் பயணம் மேற்கொண்டார். எல்லையை பாதுகாத்து வரும் வீரர்களை சந்தித்து உரையாடி, அவர்களது துணிச்சலை பாராட்டி ஊக்கப்படுத்தினார். இந்த பயணம் நாடு முழுவதும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், தலைமையேற்று முன்னால் செல்கிறார். துணிச்சலும், தைரியமும் மிகுந்த நமது ராணுவம், விமானப்படை மற்றும் இந்தோ-திபெத் படையினருடன் லடாக் எல்லையில் பிரதமர் நரேந்திர மோடிஜி. மாண்புமிக்க பிரதமரின் இந்த பயணம் நமது வீரர்களின் மன உறுதியை நிச்சயம் உயர்த்தும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘துணிச்சல் மிகுந்தவர்கள் இந்த பூமியை சொந்தமாக்கிக் கொள்வார்கள். பிரதமர் மோடியின் வார்த்தைகள் 130 கோடி இந்தியர்களின் உணர்வுக்கு வார்த்தைகளை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.