இமாசல பிரதேச பாடலை பாடிய கேரள மாணவிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு
By: Karunakaran Sun, 11 Oct 2020 3:50:10 PM
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தேவிகா என்கிற மாணவி இமாசலபிரதேச மாநிலத்தின் பிரபலமான ஒரு பாடலை பாடி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த மாணவியின் இனிமையான குரல் இணையதள ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் கண்டனர்.
இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாகூர் கேரள மாணவியின் வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த இதயங்களையும் மாணவி வென்று விட்டதாக பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவி தேவிகாவை இமாசலபிரதேச மாநிலத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
தற்போது, கேரள மாணவி தேவிகாவின் பாடல் வீடியோவை பிரதமர் மோடி டுவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் தேவிகாவை கண்டு பெருமைபடுகிறேன். அவரது மெல்லிசை குரல் “ஒரு இந்தியா, சிறந்த இந்தியா” என்ற சாரத்தை பலப்படுத்துகிறது என மலையாள மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது பாடலை ரசித்ததற்காக மாணவி தேவிகா பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது மாணவியின் இந்த பாடலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது வீடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.