- வீடு›
- செய்திகள்›
- சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் - போலீஸ் கமிஷனர் தகவல்
சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் - போலீஸ் கமிஷனர் தகவல்
By: Monisha Fri, 19 June 2020 11:04:22 AM
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று முதல் 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கை யொட்டி சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனாவை தடுக்க அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு சென்னையில் தீவிரமாக அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முதல்-அமைச்சரும், அரசும் அறிவித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்க வாகனங்களில் செல்லக்கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும். மீறி வாகனங்களில் சென்றால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
பணிக்கு செல்லும் 33 சதவீத மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உரிய அடையாள அட்டையை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டால் நல்லது. வெளியூர் செல்ல கண்டிப்பாக ‘இ-பாஸ்’ வாங்க வேண்டும். பழைய ‘இ-பாஸ்’ வைத்திருப்பவர்கள் அதை முறையாக புதுப்பித்து பயன்படுத்தி கொள்ளலாம். போலியாக ‘இ-பாஸ்’ தயாரித்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் அண்ணாசாலை போன்ற முக்கியமான சாலைகள் ஊரடங்கையொட்டி மூடப்படும். அந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் போன்ற அத்தியாவசிய சேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். காமராஜர் சாலை போன்ற ஒரு சில சாலைகளில் கடந்த முறை மேற்கொண்ட நடைமுறை பின்பற்றப்படும். பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘டிரோன் கேமராக்கள்’ பயன்படுத்தப்படும்.
சென்னை நகர எல்லையை தாண்டி பணிக்கு செல்லும் ஊழியர்கள் தினசரி சென்றுவர அனுமதி இல்லை. வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டும். தனியார் நிறுவன காவலாளிகள் உரிய சீருடை அணிந்து சென்றால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.