பொங்கல் பண்டிகை ... சிறப்பு பேருந்துகள் முன்பதிவு தொடங்கியது
By: vaithegi Wed, 04 Jan 2023 9:10:40 PM
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே இதன் காரணமாக, ஏராளமானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் பொதுமக்களின் பயணத்தை சுலபமாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் பற்றி ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.இதையடுத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்ததாவது, சென்னையின் 5 பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் 12 முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் 4,449 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,749 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கும் 6,183 சிறப்பு பேருந்துகள் என பொங்கல் பண்டிகைக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
இதனை அடுத்து பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்கு ஏதுவாக 16 முதல் 18ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் 2,100 பேருந்துகளுடன் 4,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மற்ற முக்கிய ஊர்களுக்கும் சேர்த்து 15,599 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வெளிவட்ட சாலை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லும். தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து செல்ல முன்பதிவு செய்தவர்கள் அங்கு ஏறிக்கொள்ளலாம். tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.