கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டம்
By: Karunakaran Sun, 02 Aug 2020 4:50:22 PM
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியிலும் உள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் பாதிப்பு குறைவு. இருப்பினும், கடந்த சில தினங்களாக அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை மக்கள் பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு, கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் உள்ள பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று சத்தமிட்டனர்.
இந்த ஊர்வலத்தில் பலதரப்பட்ட மக்களும், அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.