10ம் வகுப்பு பொதுத்தேர்வு வழக்கு ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
By: Monisha Mon, 08 June 2020 5:29:33 PM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று நீதிபதிகள் வினீஷ் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்த அவசரம் காட்டும் அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழகத்தில் வரும் நாட்ககளில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10 வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
‘கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்போது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல் உள்ளது, பேராபத்தாக முடியும்.’ என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.
இவ்வாறு அடுத்தடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்தும் நீதிபதிகள் ஏற்கவில்லை. உடனே தேர்வை நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை, தேர்வை தள்ளி வைக்க முடியுமா என பரிசீலனை செய்யுங்கள் என கூறினர். அத்துடன், தமிழக அரசு சார்பில் கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.