நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் 2வது அலை காரணமாக பொதுத்தேர்தல் தள்ளிவைப்பு
By: Karunakaran Mon, 17 Aug 2020 4:01:52 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின், அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஆக்லாந்தில் 49 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதால், அங்கு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக அந்நாட்டில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை கைவிட்டன.
கொரோனா வைரஸ் காரணமாக, தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய கட்டயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார். 120 உறுப்பினர்களை கொண்ட நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.